கல்வி வளர்ச்சியில் அதிகக் கவனம்!
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சேவைத் துறையின் பங்களிப்பை உயர்த்தும் முயற்சியில் கல்வி வளர்ச்சியில் அதிகக் கவனம் செலுத்தப்போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில் அக்டோபர் 30ஆம் தேதி நடைபெற்ற உயர் கல்வி மாநாடு 2018 நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சரான சுரேஷ் பிரபு பேசுகையில், “இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கு பங்களிப்பை சேவைகள் துறை வழங்கி வருகிறது. இப்பங்கை இன்னும் அதிகரிக்க விரும்புகிறோம். அதில் கல்வித் துறையும் முக்கியமான பங்களிப்பைக் கொண்டுள்ளது. அதை மேம்படுத்த நாங்கள் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளோம். இதன் அடிப்படையில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களுடன் இணைந்து செயல்படுகிறோம்.
இந்தியாவில் வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பது பெரும் சவாலான ஒன்றாக இருக்கிறது. சேவைகள் துறையின் வளர்ச்சியை மேம்படுத்தினால் வேலைவாய்ப்பு உருவாக்கத்தையும் அதிகரிக்கலாம். தொழில் துறையின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்தும், தொழில் துறையில் எழும் சவால்கள் குறித்தும் கல்வி நிறுவனங்கள் சரியான புரிதலைக் கொண்டிருக்க வேண்டும். தரம், ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் கல்வி நிறுவனங்கள் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் இந்திய வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் 12 துறைகளை இந்திய அரசு கண்டறிந்து அதில் அதிகக் கவனம் செலுத்த முடிவுசெய்தது. கல்வித் துறையும் அதில் ஒன்றாகும்.
No comments:
Post a Comment